Close
தாயக விடுதலையே தமிழரின் மூச்சு

முள்ளிவாய்க்கால்.. துயரத்தின் முடிவல்ல..

 

காலத்தால் அழியாத ஈழத்தமிழரின் தமிழீழத்திற்கான போராட்ட வரலாறு என்பது உலகவரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும். ஈழத் தமிழினம் தான் கொண்ட துயரத்தை என்றுமே எழுத்தில் வடித்துவிட முடியாது. காலம் காலமாக சிங்கள பௌத்த பேரினவாதக் கொள்கையினால் அடிமைப்படுத்தப்பட தொன்மை வரலாறுகொண்ட தமிழ் இனம் தனக்கான விடுதலையை வென்றெடுக்க மிகப்பெரும் போருக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. இது காலத்தின் தேவையாகவே இருந்ததது. சாத்வீகப் போராட்டங்கள் சிங்கள அரச இயந்திரத்தால் சகதிக்குள் தள்ளப்பட்டு மூழ்கடிக்கப்ட்ட போது தமிழர்களின் ஆயுதப் போராட்டம் உருவெடுத்தது. அடக்கு முறைகளும் அடிமைத்தனமும் எங்கு முளைக்கிறதோ அங்கு விடுதலைக்கான குரலும் அடக்கு முறைக்கெதிரான விடுதலைப் போராட்டமும் கிளர்ந்துவிடுகிறது. உலக நியதியாக கடந்த உலக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.
சிங்களம் தன் இனத்தை விரிவு எடுத்துக்கொண்ட பொறி முறை இன்னோர் இனத்தை முற்றாக அழிப்பது.. அதன் வெளிப்படையே தமிழ் இனத்தின் மீதான வன்மம் இலக்கியங்களிலும் இலங்கை வரலாற்றிலும் திணிக்கப்பட்டு அது சிங்கள மக்கள் மத்தியிலும் பெளத்த பிக்குகள் மூலமாக வளர்க்கப்பட்டது.. அதுவே காலத்தின் நீரோட்டத்தில் இன வன்மமாக உருவெடுத்தது.. அதன் தொடர்ச்சியே இனக்கலவரங்களின் தொடர் கொடூரம்.. இதற்கு எதிராக தமிழினமும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் போராட்டத்திற்குத் தயாராகியது.. தமிழினம் தன் கரத்தில் ஏந்திக்கொண்ட ஆயுதப் போராட்டமும் இதன் தொடர்ச்சியே. ஈழத்தமிழரின் விடுதலைக்காக பல போராட்ட அமைப்புக்கள் உருவெடுத்தாலும் அவை நிலைத்துவிடவில்லை.. மாறாக தமது சலுகைகளுக்காக சிங்கள அரசிடம் விலைபோனவர்களாகவே இருந்தார்கள். ஆனால் எதுவித சமரசமும் இல்லாமல் தமிழர்களின் விடுதலையே இறுதித் தீர்வு என கழுத்தில் நஞ்சு கட்டி எவ்வேளையிலும் தமிழர்களின் விடுதலைக்காகச் சாகத்துணிந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதிவரை தமது இலட்சியத்தில் நின்று நிலைத்தார்கள்.
2009 மே மாதம் 18 ம் திகதி  ஆயுப்போராட்டத்தின் இறுதிவரை தமது கொள்கையில் இருந்து மாற்றமடையவில்லை. இதற்கு அடிநாதமாக தமிழினத்தின் தலைவராக பிறப்பெடுத்த தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வழிநடத்தலும் நேரிய பாதையுமே காரணம். உலகத் தமிழினமே அவர் பின் அணிவகுத்தது. வீரியம் கொண்ட இளைஞர்கள் தலைவரின் கொள்கையை ஏற்று போராடத் தொடங்கினார்கள். குறுகிய காலத்தில் மிகப்பெரும் வளர்ச்சிகொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் போர்ப் படையணிகளை அமைத்து சிங்கள அரசின் படைகளை உருக்குலைய வைத்தார்கள். ஒரு தனிநாட்டை நிர்வகிக்கும் ஒரு அரசாக தமிழர் தாயகத்தில் பலம் கொண்டார்கள்.. 30வருடகாலப் பேரில் அபார வளர்சிகண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் ஐந்து மிகப் பெரும் படைக்கட்டமைப்பைக் கொண்டு தமிழீழத்திற்கான அத்திவாரத்தை கட்டியெழுப்ப, அது சர்வதேசம் முழுவதும் ஈழத்தமிழரின் விடுதலைப்போரை அறியவைத்தது. உலக அரங்கில் அந்த வளர்ச்சியின் தாக்கம் உணரமுடிந்தது. இலங்கையெனும் சிறிய நாட்டுக்குள் நடைபெறும் உள்நாட்டுப் போர் ஏனைய விடுதலை அமைப்புக்களுக்கும் முன்னுதாரணமாக வளர்வதை சர்வதேத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் ஆற்றல் இந்து சுமுத்திரப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செய்யத்துடிக்கும் நாடுகளுக்கு பெரும் இடையூறாக இருந்ததது. சிங்களப் பேரினவாதத்தின் இன அழிப்புச் சிந்தனை சீர்குலைந்து போனது.. ஆனால் இத்தகைய தளர்வை சர்வதேசம் புரிந்து கொண்டு சிங்கள அரசுக்கு அனைத்து வழிகளிலும் போரியலுக்கு பேராதரவைக் கொடுத்து சிங்கள பேரினவாத அரசுக்குத் துணை போனது. சீனா தன் வர்த்தகத் தளமாக இலங்கையின் வளச் சுறண்டலுக்காக காத்திருந்தது..இந்தியா இலங்கை மீது வைத்திருக்கும் ஆதிக்கமே தன் நாட்டின் இறைமைக்கு பாதுகாப்பு என தன் வெளியுறவுக்கொள்கையில் திடமாக இருந்தது..சிறீலங்கா அரசுக்கு உதவிய அனைத்து நாடுகளும் தமது நாட்டின் நலனுக்காகவே தமது கரங்களை சிறீலங்கா நோக்கி நீட்டியிருந்தன..

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட போரும் தொடர் இன இழிப்பின் கொடூரத்தையும்    தொடரும் மனித உரிமை மீறல்களையும் ஒவ்வொரு நாடுகளும் கண்டும் காணாது போல் கண்மூடித்தனமாக இருந்தது. மனித உரிமைச் சட்டங்கள் எல்லாம் சிறீலங்காவுக்கு பொருந்தாத சட்டங்களாக மாறிப்போனது. எண்ணுக்கணக்கற்ற வான்படைத் தாக்குதல்கள் மூலம் எமது தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக் கொல்லப்பட்டார்கள். தமிழ் மக்களின் அழுகுரல்கள் வெளியில் கேட்காதவாறு அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டது. சர்வதேசத்தின் இச்சூழலை சாதகமாக்கிக் கொண்ட சிங்களப் பேரினவாதம் பெருமிடுக்குடன் இன அழிப்பைத் தொடர்ந்தது. காலங்கள் கடந்தன…


2009ம் ஆண்டு இன அழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். கேட்க நாதியற்று வீதியெங்கும் பிணக்குவியல்கள் குவிந்தன… நான்கு திசையும் முடக்கப்பட்டு பல நாடுகளின் உதவிகொண்டு குறிப்பாக இந்தியாவின் பெரும் ஆதரவுடன் போர் முடுக்கிவிடப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளும் தமது வலுவுக்கேற்ப பாரிய தாக்குதல்களை தொடுத்தார்கள். சிங்கள அரச இராணுவம் தட்டுத் தடுமாறி திகைத்து நின்றது. இனியும் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவத்தை பலிகொடுக்க முடியாது என இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா புதுக்குடியிருப்பில் இருந்து தலைமைப்பீடத்திற்கு அறிவித்த போது இப் போரின் நிலையை அவதானித்திருந்த  இந்தியா  தனது படைகளின் உதவியுடன் மேலும் போரைத் தொடர்ந்தது.தன் படைகளை நேரடியாகவே படைநடவடிக்கையில் ஈடுபடுத்தியது.. ஆனால்  கொண்ட கொள்கையில் குன்றிடாத இலட்சியம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரும் போராளிகளும் நேரடியாகவே களத்தில் நின்று போராடினார்கள். தமது இறுதி மூச்சு உள்ளவரை தமிழீழ விடுதலைக்காகப் போராடி வீரகாவியம் படைத்தார்கள். தமிழீழ தேசியத்தலைவரும் அவரது குடும்பமும் இறுதிப் போரில் தம்மை ஆகுதியாக்கிக்கொண்டார்கள்.. விடுதலைப் புலிகளின் இவ் வீழ்ச்சியையே சர்வதேசம் எதிர்பார்த்திருந்தது. அதை நடத்தியும் முடித்தது. ஆனால் இன்றைய சூழலில் இந்தியத் துணைக்கண்டம் இச் செயலுக்காக வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.
தமிழீழ விடுதலை புலிகள் இருந்த காலத்தில் கடற்புலிகளின் பெரும்பலம்,  இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு மிகப்பெரும் பாதுகாப்புச் சக்கிதயாக இருந்ததை அப்போது அவர்கள் உணரவில்லை. ஆனாலும் தன் குறுகிய அரசியல் சிந்தனை, மாற்றமடையாத வெளியுறவுச் சிந்தனை  விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் ஐந்து வருடங்களுக்கு  நீடித்துக்கொண்டிருக்கிறது.. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் கடல்வளப் பாதுகாப்பில் இந்தியாவுக்கு எத்தனை பலவீனம் இருப்பதை இப்போது கண்டுனர்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் என்றும் இந்தியாவின் நட்புடனேயே தொடர வேண்டும் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் பல தடைவைகள் தமது வெளியுறவுக் கொள்கைள் மூலம் தெரியப்படுத்தியிருந்தும் அதைப் புரிந்துகொள்ள முடியாத பெரு வல்லராசாகவே இந்தியா இன்றளவிலும் இருந்து வருகின்றது. இங்கே நாம் குறிப்பிட்டுக் கூறத்தக்க விடயம் அயல் நாடாக இருந்தாலும் பல கோடி தமிழர்கள் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் ஒரு பெரும் தமிழினப் படுகொலைக்கு சிங்களப் பேரினவாத இன அழிப்புக்கொள்கைக்கு பேருதவியாக இருந்தது இந்திய வெளியுறுவுக் கொள்கையே. தமிழர்கள் இந்தப் போரின்வடுக்களை, அதற்குக் காரணமா இருந்தவர்களை என்றும் மறந்துவிட மாட்டார்கள். காலம் காலமாக இந்தத் துரோக வரலாறுகள் ஈழத்திழரின் சந்ததிக்கும் கடத்தப்படும். சிங்கள இனவாத அரசின் கண்மூடித்தனமான படுகொலைகளும் சர்வதேசத்தின் பொய் முகமும் எமது இளம் தலைமுறை கற்றுனர வேண்டும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் 2008 மாவீரர் உரையில் குறிப்பிட்டது போன்று எமது போராட்டம் புலம் பெயர்ந்து வாழும் இளைய தலைமுறை கையேற்று நடத்த வேண்டும் என்ற கூற்றை உணர்ந்து எமது இளைய தலைமுறை உலக அரசுகளின் அரசியல் போக்கையும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையையும் சிறீலங்கா அரசின் பௌத்த பேரினவாக் கொள்கையையும் முழுமையக அறிந்துணர்ந்து ஈழத்தமிழரின் தாயகத்தை மீட்டெடுக்க உலக அரங்கில் போராடவேண்டும். தமிழீழ தேசியத் தலைவரின் இலட்சியத்தை, பல்லாயிரம் மாவீரர்களின் தமிழீழக் கனவை ஏந்தியவர்களாக ஈழதேச விடியலை நோக்கி நடக்க வேண்டும். அதற்கு எமது வரலாற்றை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும்.

கொத்துக் கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட எமது மக்களின் தியாகமும், தேசத்தின் விடுதலைக்காக களமாடிய எமது மாவீரர்களின் தியாகமும் காலத்தால் அழியாமல் இருக்கவும், இனவாத நோய் கொண்ட சிங்க அரசின் கோர முகம் சர்வதேசம் முன் நிறுத்தப்படவும் எமது இளைய தலை முறை தம்மாலான சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுவே இந்த மே 18ல் நம் முன் எழுந்து நிற்கும் இன் நாளின் கடமையாகும்..
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

அன்பரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0 Comments
scroll to top